தொடர்ந்து பதிவிடமுடியவில்லை. ஒருவித விரக்தியும் கூட காரணம். ஏதொ ஆர்வத்தில் ஆரம்பித்துவிட்டு வாசகர்களின் வருகை காரணமாக தொடர்ந்து பதிவிடவேண்டிய அவசியம் உருவாகிவிட்டது. மிகவும் ஆபாசம் எனக் கருதியவற்றை நான் வெளியிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்த எதிர்வினைகள் இப்போது இல்லை என்றாலும் என் அந்தரங்கத்தை இப்படி கடை பரப்பியதை எண்ணி மன உளைச்சலும் அடைகிறேன். ஏனென்றால் இதை வெளியிடுவதற்கு எனக்கே மனம் ஒப்பவில்லை. இதனால் நான் சாதிக்கப் போவது என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனாலும் இணைய வாசிப்பு அதிகமாகிய பிறகு இதில் தவறொன்றும் இல்லை என்றும் படுகிறது. மேற்குலகில் வேண்டுமானால் எல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால் நமது நாட்டில் எல்லாவற்றுக்கும் பயந்தே ஆகவேண்டியிருக்கிறது. இந்தக் கடிதங்கள் (விடுபட்ட கடிதங்களும் சேர்த்து) அனைத்தையும் புத்தகமாக வெளியிட முடியுமா தெரியவில்லை? யாரும் இதற்கு முன் வருவார்களா என்றும் தெரியவில்லை? வா.மு.கோ.மு.வின் நாவல்கள் படித்த பின்பு சாத்தியம் என்றே படுகிறது. பார்க்கலாம்.
திரு. நாகார்ஜூனனின் திணை இசை சமிக்ஞை வலைத்தளத்தில் ழார் பத்தாய்யின் ‘விழியின் கதை’ நாவலைத் தமிழாக்கம் வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தபோது என்னுடைய கடிதங்களும் இதுபோல் வெளியிடமுடியுமா என்ற ஆவல் ஏற்பட்டதை இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
ழார் பத்தாய் (Georges Bataille – 1897-1964) என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளர் எழுதிய Histoire d’Oeil – அதாவது The Story of the Eye என்ற இந்த நாவலை வாசிக்க, தைர்யம் வயதுவந்தோர்க்கு வேண்டும். இவர், 1928-ஆம் ஆண்டு இந்தக் குறுநாவலை Lord Auch என்ற புனைபெயரில்தான் எழுதினார். மொழி பெயர்த்தவர் ஜெனிவா வாழ் பெண் யூரேக்கா. அதற்கான இணைப்பு இங்கே விழியின் கதை.
இணைப்புக்குப் போகுமுன் அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்ட இந்த வரிகளையும் படியுங்கள்.
குறுநாவலை வாசிப்பதற்கு முன்னர்;
1. தைர்யமில்லை என்று தெரிந்தால் நிறுத்திவிடவும். தொடர்ந்து வாசிக்க வேண்டாம்.
2. தமிழிலக்கியம் பழகி உள்ளொளி, அகதரிசனம், ரசனை, ஒழுக்கவியல் சார்ந்திருப்பவர்கள் மேலே வாசிக்க வேண்டாம். உங்களுக்கில்லை இது. கொச்சையான-மனிதவிரோத எழுத்து என்று இதை எளிதாக விமர்சித்துவிடலாம். பத்தாயும் விமர்சிக்கப்பட்டார்.
3. வெறும் போர்னோ எழுத்தென நம்பி வாசிக்க விரும்பிவரும் லாட்ஜ்-விடலை ஆண்கள் வாசிக்க வேண்டாம். உங்களுக்குமில்லை இது.
4. இதைக்கேட்டு உடன் அகல்வோருக்கு நன்றி. பிற பதிவுகளில் சந்திக்கலாம்.
5. மொழியாக்கம் யூரேக்கா. என் பொறுப்பு சரிபார்ப்பது மாத்திரம்.
6. கொச்சை வார்த்தைகள் வரலாம் என்பது உங்களில் பெரும்பான்மையோர் கருத்து. நன்றி. ஆனால், யூரேக்காவின் விருப்பப்படி கொச்சை வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
7. தொடரலாமா, வேண்டாமா என்பதும் உங்கள் விருப்பத்தின் அடிப்படையில்.
எனது நண்பனின் கடிதங்கள் அனைத்தும் என் பாதுகாப்பு கருதி எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விட்டேன். அந்தக் கடிதங்கள் இருந்திருந்தால் ஒரு ஆணின் தவிப்பும், சமூகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளும், கடமைகளும் இயற்கை ஆசைகளைக் கூட இயல்பாக தீர்த்துக்கொள்ள முடியாத வேதனைகளையும் ஒரு ஆணின் பார்வையில் இங்கே பதிவாக்கியிருக்க முடியும்.
குழந்தை வளர ஆரம்பித்ததும் என் எண்ணங்களை திசை மாற்ற முயற்சித்தேன். நண்பனுக்கு கடிதம் எழுதுவதை அறவே தவர்த்தேன். இனி பேச்சோ, நினைப்போ ஏன் மூச்சுக்காற்றோ படக்கூடாது என்று முடிவெடுத்தேன். கொசஞ்சம் கொஞ்சமாய் மறக்க முயற்சித்தேன். இரண்டு வருடங்கள் எந்தக் கடிதப்போக்குவரத்தும் இல்லை. இந்தக்காலகட்டத்தில் என்னைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது கடிதங்களை வைத்து ஏதும் பிரச்சனை கொடுக்கவோ முயலாத நண்பன் மீது மேலும் மதிப்புதான் அதிகமாகியது.
எனக்கு நண்பனைப் பற்றியோ அல்லது என் நண்பனுக்கு என்னைப் பற்றியோ எதுவும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது. ஏன் உயிரோடு இருக்கிறோமா அல்லது செத்துப்போனோமா என்ற தகவல் கூட தெரிய வாய்ப்பில்லை. இதுவரை வெளியிட்ட கடிதங்கள் எல்லாம் பகுதி 1 என்று எடுத்துக்கொண்டால் மீண்டும் நாங்கள் தொடர்பு கொண்டபோது பரிமாறிக்கொண்டவை எல்லாம் பகுதி 2 எனக் கொள்ளலாம். அடுத்து வெளிவரும் கடிதங்கள் எல்லாம் பகுதி 2 பகுப்பைச் சார்ந்தவை!
ஆனால் தொடர்ந்து வெளியிட முடியுமா தெரியவில்லை. பாரப்போம்.
அன்புடன்,
உயிர்த்தோழி.




