நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டு கவிஞரான ‘பாப்லோ நெருடா’ காதலைக் கொண்டாடியவர். தனது நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சுற்றுக்கோட்டையும் பழைய அரண்மனை ஒன்றும் இருந்த ‘ஜலா நெகரா’ என்ற தீவை விலைக்கு வாங்கினார்.
அந்தத் தீவில், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் காதலர்கள் வந்து சேர்ந்து, ஆடிப்பாடி தங்களுக்கு விருப்பமான கவிதைகளை அந்தக் கோட்டைச் சுவர்களில் எழுதிப் போகலாம் என்று பிரகடனப் படுத்தியிருந்தார்.
அவர் இறந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றுவரை அந்தத் தீவு காதலர்களின் புகலிடமாகவே உள்ளது.
‘நெருடா அரசியல் காரணங்களுக்காகச் சில ஆண்டுகாலம் இத்தாலியில் ஒளிந்து வாழ்ந்தார். அந்த நாட்களில் அவருக்குத் தபால் கொண்டுவரும் தபால்காரன் ஒருவனுக்கும் நெருடாவுக்கும் நட்பு ஏற்பட்டது. தபால்காரன் ஒரு நாள் கவிஞரிடம் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளை அடைவதற்காக ஒரு காதல் கவிதை எழுதித் தரும்படியாகவும் கேட்கிறான்.
‘நான் உனக்குக் காதல் கவிதை எழுதித் தந்தால் அந்தப்பெண் என்னைக் காதலிக்கத் துங்கிவிடுவாள், பரவாயில்லையா?’ என்று சிரிக்க, ‘என்னால் வேறு எப்படி ஒரு பெண்ணின் மனதை அடைய முடியும்?’ என்று கேட்கிறான். சரி, உனக்குக் கவிதை எழுதக் கற்றுத் தருகிறேன், அதைக் கொண்டு நீயே ஒரு காதல் கவிதை எழுதிவிடலாம் என்று கவிதை குறித்த ஆழ்ந்த புரிதலை அவனிடம் ஏற்படுத்துகிறார்.
கவிதையும் காதலும் பிரிக்கவே முடியாதது போலும். கவிதை தெரியாத அல்லது எழுதாத காதலர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன? எல்லாக் காதலர்களும் டயரியில், கல்லூரிப் பாட நோட்டுக்களில் கவிதை எழுதி ஒளித்து வைத்திருக்கிறார்கள்.
காதலிக்கச் சந்தர்ப்பம் அற்றுப்போய், அந்த ஆசையை நூற்றுக்கணக்கான கவிதைகாளாக எழுதித் தீர்த்துக்கொள்பவர்கள் என்றும் ஒரு ரகம் இருக்கிறது. காதலிக்காத ஆணோ பெண்ணோ கூட இருக்கக் கூடும். ஆனால் காதல் கவிதையை எழுதாத அல்லது ரசிக்காத ஆணும் பெண்ணும் வாலிப வயதைக் கடந்து வரவே முடியாது என்பது என் எண்ணம்.
வாழ்வின் விசித்திரம், யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. சரித்திரத்தின் கல்லெழுத்துக்களிலிருத்து சம காலத்துக் கதைகள் வரை, காதல் விநோதங்களால்தான் நிரம்பியிருக்கிறது. காதல் கவிஞர்களை உருவாக்குகிறதோ இல்லையோ, சில ஆழ்ந்த நினைவுகளை உருவாக்கி விடுகிறது.
பிரிவு, காதலின் ஆறாத துயரம். அது களிமண்ணைப் போலப் பிசுபிசுப்பும் ஈரமும் கொண்டதாகவே எப்போதும் இருக்கிறது. பிரிந்த காதல் எத்தனையோ இலக்கியங்களின் வித்தாக இருந்திருக்கிறது. ஆன்டன் செகாவின் மூன்று காதல் கதைகளும், வைக்கம் முகமது பஷீரின் இளம்பருவத் தோழியும், தாஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளும், என்றும் மறக்க முடியாத காதல் கதைகளாக இருப்பதற்கு, பிரிவுத்துயரும் ஒரு காரணம்தான் இல்லையா?
எஸ். ராமகிருஷ்ணன் – கதாவிலாசத்தில்.




shamurai
நவம்பர் 10, 2011 at 11:39 பிற்பகல்
painful truth
raj
நவம்பர் 12, 2011 at 11:34 மு.பகல்
amazing